Thursday, September 17, 2009

எஸ். எம். எஸ். ராசாக்களுக்கு.....


இன்றைய நாள் புலரும் முன்னரே எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. நண்பர் ஒருவர் எனக்கு பார்வர்ட் செய்திருந்தார். அது "AB + blood Required for a heart surgery in chennai. Please contact arun 98414XXXXX" . நான் தொடர்ந்து "ரத்த தானம்" செய்து வருவதாலும், AB + ரத்த பிரிவை உடைய, தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையில் இருப்பதாலும் இது முக்கியமான குறுஞ்செய்தியாக எனக்கு பட்டது. எங்கே வர வேண்டும், என்றைக்கு தேவை படுகிறது, எவளவு தேவைபடுகிறது என்பதை அறிய குறுஞ்செய்தி அனுப்பிய நண்பரை தொடர்பு கொண்டேன். அவரோ தனக்கு தெரியாது எனவும், தனக்கு வந்த செய்தியை தான் எனக்கு பார்வர்ட் செய்ததாகவும் கூறினார். உடனே அந்த குறுஞ்செய்தியில் கொடுக்கப் பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டேன்.

சற்று தாமதமாகவே எதிர் முனையில் இருந்தவர் "ஹலோ" என விளிக்கும் குரல் கேட்டது, தூக்கம் இன்னும் கலையவில்லை என்பது மட்டும் புரிந்தது . நான் மெதுவாக "சார் பிளட் வேணுமுன்னு மெசேஜ் வந்தது....." நான் முடிக்கவே இல்லை.... அதற்குள் அவர் "அது ஏதோ பரதேசி பய என்னோட நம்பர கொடுத்திருக்கான்............" திட்டி கொண்டே இருந்தார் . "ரொம்ப சாரி சார் டிஸ்டர்ப் பண்ணினதுக்கு" என்று கூறி இணைப்பை துண்டித்தேன்...

ஒரே நேரத்தில் அழுகையும் கோபமும் என்னையும் மீறி பீறிட்டு வந்தது.... எனக்கு இந்த குறுஞ்செய்தியை அனுப்பிய நண்பரிடம் கத்தி தீர்க்க அலைபேசியை எடுத்து விட்டு பின் மனம் மறுதலித்ததால் "நீ அனுப்பிய குறுஞ்செய்தி பொய்" என்பதை மட்டும் செய்தியாகவே அனுப்பி வைத்தேன்.

இது போல் எண்ணற்ற குறும் செய்திகள் எனக்கு வருவது உண்டு, ஆனால் பெரும் பாலும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கும் எண்களை தொடர்பு கொள்ளவே முடியாது. தொடர்பு கொள்ள முடியும் பட்சத்தில் என் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ உதவியும் செய்து இருக்கிறோம்.

அறிவியலின் அசுர வளர்ச்சியில் குறும் செய்தி ஒரு அற்புதம் என்பேன். அதே வளர்ச்சியை தன் சொந்த காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த உபயோகிப்பவர்களை மனிதன் என்பதா?மிருகம் என்பதா ?

தயவு செய்து இது போன்று குறும் செய்திகள் வரும் பட்சத்தில் கூடிய மட்டும் நாமே அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு செய்தியின் உண்மையை அறிந்து கொள்வோம், அதன் பின் நம்மால் நேரடியாக உதவ முடியா விட்டால் அதை பார்வர்ட் செய்வோம். இப்படி செய்யும் பட்சத்தில் நல்லதை நாம் செய்ய இயலா விட்டாலும் கெட்டதற்கு துணை போக வில்லை என்ற நிம்மதியாவது நம்மோடு இருக்கும்.

குறும் செய்திகள் வழியாக பரப்பப்படும் மோசடிகள் ஒருசிலவற்றை கீழே கொடுத்து உள்ளேன். இப்படி வரும் குறும் செய்திகள் 100% பொய் ஆனவை.

"pls forward and help... +9190477XXXXX. I am kavitha studiying 1st B.Sc ............. college, chennai. I lost my left eye in an accident. The operation cost 1 lakes. I dont know u but, if u send this sms i'll get 1 rs. If u have free sms plz fwd atleast 10 members. You dont neglect htis s tru. May God bless U 4 ever."

"Pls who love your mother ples help 2 dis mother. I am anitha 98947XXXXX? My son heart operation. I u forward dis mgs i will get 10 ps? I beg u 2 save my child plz"

எனவே இப்படி வரும் குறும் செய்திகளையும் அதை அனுப்பும் எஸ். எம். எஸ். ராசாக்களையும் முற்றிலும் புறக்கணிப்போம். நன்றி.